Friday, December 28, 2012

யுவசக்தி. . .


எழுச்சிமிகு இளைஞர்களின் எண்ணத்துதித்த சக்தி
ஏகலைவனைப் போல் எழுந்த சக்தி

தன்னலம் துறந்த சக்தி
தனித்துவத்தோடு திகழும் சக்தி

மகளிர்க் கொடுமை அறுக்கும் சக்தி
மக்களின் மாண்பை காக்கும் சக்தி

பெண்ணின் பெருமை பேசும் சக்தி
பெண்டிர்க்குரிமை உணர்த்தும் சக்தி

தீவு தோறும் சுழலும் சக்தி
தீண்டாமையை அகற்றும் சக்தி

இளைஞர்களின் எழுச்சி சக்தி
இயலாமையைத் தடுக்கும் சக்தி

சுயமாய் சிந்திக்க வைக்கும் சக்தி
சுயமுன்னேற்றத்தைக் கொடுக்கும் சக்தி

எளிமையோடு திகழும் சக்தி
மக்களின் ஏழ்மை நிலைதனை அகற்றும் சக்தி

சமுதாய ஏற்றம் காணும் சக்தி
சமத்துவ கோட்பாடு கொண்ட சக்தி

நாளைய சமுதாய ஊக்க சக்தி
நாளது சரித்திரம் படைத்திடும் சக்தி.

Monday, October 15, 2012

தேவர்


பசும்பொன் கண்டெடுத்த
பத்தரைமாத்துத் தங்கமாம்

உக்கிரபாண்டி இந்திராணி - ஈன்றெடுத்த
இயற்றமிழ் சொற்றொடராம்

ஊரறிந்த நாயகனாம் - தேவர்
உண்மை உரைப்பவராம்

வீரத்தின் விளைநிலமாம் - தேவர்
விவேகத்தின் சுடரொளியாம்

ஆன்மிகத்தின் அறிவொளியாம் - தேவர்
அரசியலின் கலங்கரை விளக்காம்

தேசிய விடுதலைக்காய் - தேவர்
தீராதுழைத்திட்டார்

கால்பகுதி வாழ்நாளில் - தேவர்
சிறைதனிலே கழித்திட்டார்

அடிமைத்தளைகள் அறுந்திடவே - தேவர்
அயராது ளைத்திட்டார்

ஆள் பிடிக்கும் சட்டத்தினை - தேவர்
அடியோடு அகற்றிட்டார்

நேதாஜி போஸ் உடனே - தேவர்
நேர்மையோடு பாடுபட்டார்

ஊர் முழுக்க படை திரட்டி - தேவர்
ஒன்றிணைந்து உழைத்திட்டார்

தீண்டாமை ஒழிந்திடவே - தேவர்
தீர்க்கமாக செயல்பட்டார்

தமிழகம் முழுவதிலும் - தேவர்
தளராத் தொண்டு செய்தார்

காங்கிரஸ் கட்சியினை - தேவர்
கால்பதிக்க வைத்திட்டார்

ஊருக்காய் உழைத்தவர் - தேவர்
உண்மையாய் வாழ்ந்தவர்.

சாதியம் மறுத்தவர் - தேவர்
சமத்துவம் கண்டவர்

சமபந்திதனை கொண்டு - தேவர்
சமரசம் கண்டவர்

தம் சொத்துக்களை  - தேவர்
சரிபங்கு பகிர்ந்தளித்தார்

சாதி மத பேதமன்றி - சம பங்கு
தானளித்தார் தேவர்

தேசியம் காத்திட்டார் - தேவர்
தெய்வீகம் கண்டுணர்ந்தார்

தன்நலம் கறுதாது என்றும்
பிறர் நலம் காத்தவர் - தேவர்.

 ***

Wednesday, May 23, 2012

ஊரைக்கெடுக்கும் உத்தமர்கள்


ஊரைக்கெடுக்கும் உத்தமர்கள்

காவியில் சிலர்
காதியில் பலர்
காக்கி உடுப்பிலும்
காக்கும் பொருப்பிலும்
அதிகார வர்க்கத்தின்
ஆதிக்க நிலையிலும்
இன மொழி மதவாத
மதிப்புமிகு மருவாதைகளும்
பணத்திற்காய் நித்தம்
பிணம் தின்னும் கழுகுகளும்
சமூக அந்தஸ்துள்ள
சமயப் பெருச்சாளிகளும்
சுயநலத்தின் சுகத்திற்காய்
ஏங்கும் சுயவிளம்பரப்பிரியர்களும்
எது நிகழ்ந்தாலும் எமக்கென்ன
என்று திரியும் ஏதிலிகளும்
வீண் பேச்சு பேசி வெட்டியாய்த்
திரியும் வெடலைகளும்
எந்தப் பொருப்பும் ஏற்க்க மறுக்கும்
பொருப்பில்லாதவர்களும்
உலக நடப்பு தெரிந்தும் தெரியாதவர்களாய்
திரியும் கணவான்களும்
வாக்கு போடக்கூட வாக்கிங் செல்ல
துணிபு இல்லா சோம்பேரிகளும்
நோட்டுக்கு ஓட்டு என்று
விலை பேசும் வித்தகர்களும்
விலைபேசி வாக்களிக்கும்
சாமானியரும்
தவறு கண்டும் காணாதவராய்
போகும் குருடர்களும்
கலப்படத் தொழில் செய்யும்
கலப்பினமும்
விளையாட்டுகளை விலை
பேசும் வீணர்களும்
அகம் ஒன்று புறம் ஒன்றாய்
ஜெகம் போற்ற வாழ்பவரும்
இது போன்ற இன்னும் பலர்
இதே வழியில் செல்பவர்கள். . .
ஊரை மட்டு மல்ல உலகை கெடுக்கும் உத்தமர்கள்.

Monday, May 21, 2012

அன்னா ஹசாரே



உயர்ந்த எண்ணங்கள் கொண்டவர்
உயரம் சற்றே குறைந்தவர்
ஊழல் ஒழிக்க பாடுபடும்
உண்மையான தொண்டரிவர்.

என்பது வயதுகள் தாண்டியும்
ஈரெட்டு வயதாய் உழைக்கின்றார்
என்ன உழைத்து பார்த்திடினும்
துவங்கிய இடத்திலே இருக்கின்றார்.

ஊர் முழுக்க இளைஞர் படைதிரட்டி
உன்னதமான பணி சிறக்க
ஓடி ஓடி உழைக்கின்றார் உடலின்
ஒத்துழையாமையைத் தடுக்கின்றார்.

ஊழல் ஒன்றே உண்மை என்று
உழைக்கும் உத்தமர் நடுவினிலே
ஊழல் அற்ற உலகம் படைக்க
நினைப்பவர் பாடு புரிந்திடுமே !

உலகம் முழுக்க ஊழல் என்று
ஊரிப்போன பின்பு கூட
ஊழல் அறுக்க ஊர்முழுக்க
படை திரட்டிடும் பண்பை என்ன சொல்ல ?

காலம் ஒருநாள் மாறும்
இவர் கனவுகள் யாவும் தீரும்
பட்டங்கள் ஆள்பவர் மத்தியிலே- சில
சட்டங்கள் ஆளும் காலம் வரும்.
***

Friday, May 18, 2012

சூழ்ச்சி


சுழழுகின்ற புவிமுழுதும்
சூழ்ந்து நின்ற போதிலும்
சூனியத்தின் முயற்ச்சியால்
சூழ்ச்சி ஒன்று நடக்குதே

ஆளுகின்ற ஆட்சிகளின்
அடிமைத்தன புத்தியால்
சக்தியொன்று அழிந்து போக
சூழ்ச்சியொன்று நடக்குதே

தனித் தமிழின் பெருமைபோல
துணிந்துநிற்கும் மறத் தமிழனை
சூழ்ந்து நின்று கைதியாக்க
சூழ்ச்சியொன்று நடக்குதே

ஏழுநாடு ஒன்று கூடி
ஏமாந்த வேளையில்
எந்தமிழரை வென்றுபோக
சூழ்ச்சியொன்று நடக்குதே

ஆண்டதமிழ் பெருமை தனை
அறியாத் தமிழர் ஒருவரை
ஆசைகாட்டி மோசம் செய்ய
சூழ்ச்சி ஒன்று நடக்குதே

அடிமைத்தனத்தின் மடமையோடு
மாறுபட்டுத் திகழ்ந்திட - நம்
ஆனிவேரை அறுப்பதற்கு
சூழ்ச்சி ஒன்று நடக்குதே

என்னவளே !

உயிரோ அல்ல உடலோ -என்
இதயத்தில் உதித்த மலரோ

கனவோ அல்ல நினைவோ
அவள் கலந்ததென்ன உறவோ

இசையோ அல்ல மழையோ- ஈருடல் 
சேரும் போதென்ன நிலையோ

குயிலோ அல்ல குரலோ- அவள் 
கூவுவதென்ன மொழியோ

நிலவோ கடும் குளிரோ -அவள்
கண்களில் அத்துனை நிறைவோ

இதமோ அல்ல பதமோ
இயற்கையே இது தகுமோ

மகரந்த ங்களின் மழையோ- சற்றே
இதமாய் தாங்கிடும் துணிவோ

அகரம் முதலாய் அவளோ
அஃகு பஞ்ச்சரான நிலையோ

பிரபஞ்சத்தில் ஆதி முதலாகவே -இதுவோ
இங்கு நிகழ்வது தான் புதிதோ

இயற்கையி
ல் நியதிகள் உளதோ
உணர்வுற்ற பின்னே பிரிவோ.

Sunday, April 15, 2012

சிவம் அனைவருக்கும் சமம் (சிவலிங்கம் ஒரு பார்வை)

இலிங்கம் என்பது ஒரு தமிழ்ச் சொல். (லிங்கம் அல்ல). தமிழில் - இலிங்கம், சத்திலிங்கம், சிவலிங்கம் என்று மூன்று சொற்கள் உள்ளன. இதனுடைய விளக்கம் இலக்கு = குறிக்கோள், இலங்குதல் = ஒளிர்தல், விளங்குதல் என்பதாக அமைகிறது. இலிங்கம் - ஆன்மா வாகிய உயிர் எந்த நிலையில் உள்ளது என்பதை விளக்கும் சின்னமாக உள்ளது எனலாம். இலிங்கம் என்றால் உயிர், அணு. ஒன்றரை இலட்சம் அணுக்கள் சேர்ந்ததுதான் ஒரு மனித உயிர். ஒவ்வொரு அணுவும் ஒரே மாதிரி இருக்கும். ஓர் அணுவைப் பிளந்து பார்த்தால் அது பிரிகின்ற தோற்றம்தான் இலிங்கம். உயிரின் இரகசியம்தான் இலிங்கம். இலங்கு என்றால் ஒளி என்றொரு பொருளும், ஒலி என்றொரு பொருளும் தமிழில் உண்டு. இலங்கு என்றால் விளங்கு, விளக்கம் கொடு. இலக்கு என்றால் குறிக்கோள், சின்னம், முடிவு, நிறைவு. இலக்கு, இலங்கு என்ற வேர்ச்சொற்களிலிருந்து வந்ததுதான் இலிங்கம். இலிங்கம் என்றால் உயிரின் அணு, ஒளி, ஒலி. அதிலிருந்து வந்ததுதான் சத்தி இலிங்கம், சிவ இலிங்கம் என்ற சொற்கள். இலிங்கம் எனும் சொல் வடமொழியிலிருந்து வந்தது என்பதை ஏற்றுக்கொள்ளளாகாது. கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இருநிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத் தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறது எனலாம் இதனயே சேக்கிழார் பெருமான்: “காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்”. என்கிறார் பரம்பொருளான சிவ பெருமான் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது. இலிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் இலிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா சீவராசிகளும் சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருட்டி தொடங்கும்போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன. தவிர பிரம்மா, விட்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் உணர்த்துகிறது. இலிங்க உருவில் பிரம்ம பாகமாக ஆதார பீடமும், விட்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன. இதன்மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை நாம் உணரலாம். இந்தப் பிரமாண்டமே இலிங்க வடிவமாக உள்ளது என்கிறது ஸ்ரீருத்ரம். சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய்த் தெரிகிறது. இதனையே அன்பே சிவம் என்கிறார் திருமூலர், “அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே” இப்பாடலில் நாம் அறிந்து கொள்ள வேண்டியதொன்றிருக்கிறது ……. திருமூலர் அன்பு என்று எதனைக் குறிப்பிடுகிறார் ,நாம் அனைவரும் இவ் அன்பானது ஒருவர் பிறர் மீது செலுத்தும் அன்பு என்று தான் நினைத்திருக்கிறோம் அல்லவா ஆனால் இப் பாடலை ஊன்றிக் கவனித்தால் அதனுடைய பொருள் விளங்க்கும் …….இது நாம் அடுத்தவர் மீது செலுத்தும் அன்பு அல்ல……. நமது உடம்பில் எங்கு அன்பு உருவாகிறதோ அல்லது எங்கு நிலை கொள்கிறதோ அதை தான் திருமூலர் சிவம் என்று சொல்கிறார். இதைதான் வள்ளல் பெருமானும் ஆன்ம நேய வழிபாடு என்று சொல்கிறார். சரி உடம்பில் அன்பு உருவாகும் இடம் எது? இதனை நாம் நங்கு கவனிப்போமேயானால் நம்மில் சில நண்பர்கள், அல்லது சில யோகிகள் எப்பொழுதும் சினம் கொள்ளமால் அமைதியாகவும் அன்புடனுமே இருப்பார்கள். நீங்கள் எவ்வாறு இப்படி சினம் அடையாமல் இருகிறிர்கள் என்று கேட்டால் அவர்கள் சிரிப்பார்கள். ஆனால் அவர் உடன் இருக்கும் நண்பர்கள் சொல்வார்கள் ‘அவர் சிறு வயது முதலே இப்படிதான் அன்பாக இருப்பார்’ கோபம் கொள்ளமாட்டார் என்று. சிலர் மேலும் ஒரு படி மேலே சென்று “அதெல்லாம் பிறப்பிலே அமையவேண்டும் அல்லது யோகத்தினால் அமையவேண்டும்” என்று சொல்வார்கள். அது என்ன பிறப்பிலே அமைவது? அது வேறொன்றுமில்லை….. உயிரிலே அமைய வேண்டும் என்பதைத்தான் புரியாமல் சொல்கிறார்கள். ஆம் நம் உயிர் தன்மை எந்த அளவு அன்பு மயமாக இருக்கிறதோ அந்த அளவு நாமும் மற்ற உயிர்களிடம் அன்பாக இருக்க முடியும். அது என்ன உயிர் தன்மை? நம் உயிரின் தன்மைதான். அதை எவ்வாறு அடைவது? நாம் செய்யும் தவம் நம் உயிர் தன்மையை தொட வேண்டும். அவ்வாறு உயிர் தன்மையை தொட்டு தவம் செய்தோமேயானால் அப்பொழுது உள்ளூர ஒன்று நடந்தேறும். அது என்ன? அதைத்தான் வள்ளல் பெருமான் சொல்கிறார், “நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து - அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரச என்னுரிமை நாயகனே என்ற வனைந்து வனைந்து ஏத்ததும நாம் வம்மின் உலகியலீர மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம கண்டீர் புனைந்துரையோன் பொய்புகலேன சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகும் தருனம் இதுவே” அது என்ன நம் உயிர் தன்மையை தொட்டு செய்யும் தவம் , நம் உயிர் எங்கு இருக்கிறது அதை அடையும் வழியை எவ்வாறு அடைவது என்று தெரிந்து தவம் செய்வதே ஆகும். அன்பே சிவம் என்று எளிதாக சொல்லி விடலாம். ஆனால் அந்த அன்பு நம் உடலில் எந்த விடயத்துடன் சேர்ந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஆம் அது உயிருடன் கலந்திருக்கிறது. இந்த பிரபஞ்சத்தின் எல்லா உயிர்களிலும் அன்பெனும் வடிவத்தில் சிவமாய் நிற்கிறது. இதை ஞானிகள் உணர்ந்ததால்தான். இயேசு ‘அயலானையும் நேசி’ என்றார். வள்ளல் பெருமான் சீவ காருன்யமே (கொலை தவிர்த்தலே) கடவுளை அடையும் வழி என்கிறார். உயிர் எங்கு இருக்கிறது? உயிர் பற்றி திருமூலர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்று பாப்போம்? இந்த பாடலில் திருமூலர் உயிர் பற்றி மட்டும் சொல்லவில்லை. சிவலிங்கம் என்பது என்ன என்பதை பற்றியும் சொல்கிறார், இதன் மூலம் காலம் காலமாக சிவலிங்கம் பற்றிய சிலரது தவறான கண்ணோட்டத்தை சம்மட்டியால் அடித்து எறிகிறார் (Some people used to say it’s sexual organ…….but it’s not true). அந்த பாடல் “உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானுக்கு வாய்கோபுர வாசல் தெள்ள தெளிந்தோற்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காணா மணி விளக்கே” நாம் கோவிலுக்கு சென்று சிவலிங்கத்தை தான் கையெடுத்து கும்பிடுகிறோம். இந்த பாடலின் முதல் வரியிலே திருமூலர் ஐயா… சொல்லிவிட்டார் ஊனுடம்பு ஆலயம் என்று…நம் உடம்புதான் ஆலயம் என்று சொல்லி விட்டார், பின் சிவலிங்கம் மட்டும் என்ன ஆலயத்திற்கு வெளியிலா இருக்கும்? ஒரு படி மேலே சென்று “சீவன் சிவலிங்கம்” என்றும் சொல்லி விட்டார், இப்பொழுது ஒன்றை உணரவேண்டும் ஏன் நாம் செய்யும் தவம் நமது உயிர்த் தன்மையை தொட வேண்டும் என்று, நாம் கையெடுத்து கும்பிட வேண்டிய சிவலிங்கம் புறத்தில் உள்ள ஆலயத்தில் மட்டும் இல்லை, ஊனுடம்பாகிய நம் உடம்பினுல்லும் இருக்கிறார், இதைதான் “உடம்பினை பெற்ற பயன் ஆவதெல்லாம் திடம்பட ஈசனை தேடு” -என்று அவ்வை பிராட்டியும் சொல்கிறார், “திடம்பட ஈசனை தேடு” –அவ்வையார் சொல்லி விட்டார். எங்கு போய் தேடுவது? உடம்பினுள் இருக்கார் என்று திருமூலரும் மற்றும் அவ்வையாரும் சொல்லி விட்டார்கள் இன்னும் வேறு ஏதாவது நெருங்கி சொல்லி இருகிறார்களா? என்றால் திருமூலர் இன்னும் அருகில் சொல்கிறார் “எண் சான் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்று ஒரு பாடலில் சொல்கிறார் இதன் மூலம் சிவம் என்னும் சீவனாகிய உயிர் தலையில் தான் அமைந்திருக்கிறார் என்று சொல்கிறார். ஆம், சிவம் என்றால் ஒளி என்றே பொருள்படும். சிவம் என்பது தனிப்பட்ட சாதிக்கோ, சமயத்திற்கோ உரியவர் அல்ல, இவர் எல்லா மனிதர்களிடமும் உள்ளார் என்பதை ‘வள்ளல் பெருமான்’மிக தீர்க்கமாக நம்பியதால்தான் இப்படி பாடினார்:- “சாதியும் மதமும் சமயமும் பொய் எனஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் சோதி” சிவம் இனம், மதம், மொழி எல்லாம் கடந்து எல்லோருடைய தலை பகுதியில் இருக்கிறார் என்பதாகும். ஆம், “தேவன் ஒளியாய் இருக்கிறார் நீங்களும் ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கலாம்” – இயேசு கிறித்து அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி எல்லா ஞானிகளும் கடவுள் ஒளியாக இருக்கிறார் என்றே சொன்னார்கள். அபபடி எனில் கடவுளை அடையும் வழியும் ஒன்றாகவே இருக்கும். அதாவது எல்லா ஞானிகளும் இறைவனை அடைய செய்த முயற்ச்சியும் ஒன்றாகவே இருக்கும். அன்பே உருவாக சிவத்தை நினைந்திடுவோம். அன்புடன் பி.செண்பகராஜா.

Thursday, April 12, 2012

தமிழர் சங்கமதில் சித்திரை விழா 2012 அன்று கவியரங்கமதில் வாசித்த கவிதை இது.

தமிழர் சங்க கலையரங்கில்
தமிழர் திருநாளாமதனில் 
அந்தமானின் கவிச்சக்கரவர்த்தி நடுவிறுக்க 
கவிஞர்கள் பலரும் அவரைச் சூழ்ந்திருக்க
சாட்ச்சியாய் தமிழறிஞர் பலர் முன்னிருக்க
அடியேனும் வந்தேன் அரங்கமதில் தமிழ் மணக்க
பலரும் கூடுகிறார் இந்நாளில் பலவும் தேடுகிறார் இன் நன்நாளில் நினைவலைகள் பலவோடு நான் மட்டும் நித்தம் நித்தம் நினைத்துப் பார்க்கிறேன் நிதர்சனத்தை
எனது கவிதையின் தலைப்பு:
நினைத்துப் பார்க்கிறேன்.
வந்தாரை வாழவைக்கும் தமிழனிவன்
வடக்கிறுந்து வந்தவளை பூசிப்பவன்
ஆண்டு தோறும் உதிக்கும் சித்திரையே
தமிழாண்டில் நீ பதிக்கும் முத்திரையே
தமிழர்களின் பால் நீ உதிக்கையிலே
உன்னைப் பல்லாண்டு துதி பாடி வணங்கினரே !
காக்கும் கரமென்றுனை நினைத்தோம்
ஆனால் எமை காட்டிக் கொடுத்திட்டவளென்று பின் உணர்ந்தோம்
பிற மொழியின் பெயர் தாங்கி பிறந்ததினால்
எம் பிறப்பின் சரித்திரத்தை நீ அறியாய்
விரோதியாம் ஆண்டிலே எங்கள் வேரறுத்தாய்
அது முதலாய் எம்மவரை புறக்கணித்தாய்
உன் கறை படிந்த கரம் தனை நீ கழுவப் பார்க்கிறாய்
எம்மிடமிருந்து நீ நழுவப் பார்க்கிறாய்
தனை மறந்தாலும் தமிழன் இதனை மறவான்
மே பதினேழு முள்ளிவாய்க்கால் கொடுமைதனை எவன் மறப்பான்
நீ சாட்சியோ அல்ல சண்டாளர்களின் சூழ்ச்சியோ
நான் அறியேன் என்னவிலை கொடுத்திடினும்
இதற்கு ஈடு இனி எதுவுமில்லை
மானத்தோடு வாழ்ந்திட்ட மறத்தமிழர் கூட்டம்
தன் மானம்காக்க வழியில்லையே
உலகெலாம் உவந்து உணவளித்தவன் பரம்பரைக்கு
இன்று உவக்க ஒரு வாய் உணவில்லையே
அய்யகோ என்ன செய்வேன்
குற்றமென்ன என் குற்றமென்ன தாயே
தமிழனாய் பிறந்தது குற்றமா
தமிழைப்போற்றியதால் குற்றமா
தமிழானாய் வாழ்ந்தது தான் குற்றமா
தமிழைப் பேசியதால் குற்றமா
எனது குற்றம் என்னவென்று நான் அறியுமுன்னே
எந்தமிழர் வெந்தீயில் சூழ்ந்ததென்ன கொடுமை
நடத்திட்டாய் உமது சூழ்ச்சியாலே எம்மவரை
கொன்று குவித்திட்டாய் இனி எமக்கு
ஆண்டும் புதிதல்ல மாதமும் புதிதல்ல
தமிழரைப் பழிதீர்த்த நாளும் இனிநமதல்ல !
நடந்ததெதுவும் கதையுமல்ல
நடப்பதெதுவும் முறையுமல்ல
நித்தம் செத்துப் பிழைப்பவனுக்கு
இனி சித்திரையோ நித்திரையோ எதுவுமில்லை
பழியோடு பிறந்திடும் நந்தனமே
உன் முன்னோர் இழைத்திட்ட பழி தீர்க்க
நீயாவது பாடுபடு
தமிழர் துதி பாடும் சித்திரையே
உன் நித்திரை கலைந்தெம்மை வாழவிடு
எத்துனை தான் மருந்துகள் இட்டினும்
காயத்தின் வடுக்கள் என்றும் அழிவதில்லை
எந்தமிழர் இன்புற்று வாழ்ந்திடவே
நீ ஏதாவது செய்திட நினைந்திட்டால்
இனி தமிழ் தேசம் தனக்கென்று முழங்கிடவே
வழி வகை ஏதேனும் செய்திடுவாய் தமிழாண்டே
! இனி வழிவகை ஏதேனும் செய்திடுவாய் நல்லாண்டே !!

Wednesday, March 21, 2012

ஸ்ரீ ரவிசங்கர்

அரசியல் ஆதாயம் தேடி ஆபத்பாந்தவனின் அடிமுடிசூடி இயலாமையின் இயல்போடு ஈனப் பிறவிகளாய் உழன்று உண்மைக்கு மாறான தகவல்களை ஊர்முழுக்க ஒப்பித்து எவரையும் பொருட்படுத்தாது ஏதேனும் கூறி ஐயத்தை ஏற்படுத்தும் அறிவிளிகளின் வரிசையில் ஒற்றுமையாக ஓர் அணியில் - சமுதாயத்திற்கு ஓளடதமாய் இருக்க வேண்டியவர்கள்- இன்று அஃகு பஞ்ச்சர்களாய் அனைவர் மனதில் ..

Sunday, January 29, 2012

குடியரசு தினம்

இந்தியப் பேரரசின் 63வது குடியரசு தினம்
கோலாகலமான கொண்டாட்டம்
வரலாறு காணாத பாதுகாப்புடன்
புதுதில்லி திகழ்கிறது (ப)புதுமையாய்
குண்டு துளைக்காத ஊர்தியில்
காவலர்களின் அணிவகுப்புகளோடு
பவனிவருகிறார் பாரதத்தின் குடியரசுத் தலைவர்
இத் தேசமதில் ஏனோஇன்னும்
ஒழியவில்லை பட்டினிச்சாவு
பஞ்சாபில் பயங்கரவாதம்
வங்கத்திலோ நக்சல் தீவிரவாதம்
ஆந்திராவில் தெழுங்கானா கோரிக்கை
காஷ்மீரிலோ தீவிரவாதி ஊடுருவல் - இட
ஒதுக்கீட்டுப் பட்டியலில் உரிமை கோரி
உ.பி மற்றும் ம.பி யில் போராட்டம்
தமிழகத்தில் தண்ணீர் இல்லை
இருக்கும் கேரளமோ தர மறுக்கிறது
கருநாடகத்திலோ சகோதர ஊழல் என்றால்
தலைநகரிலோ விளையாட்டுத் துறையில்
தாயகத்தினை காக்கும் பொருப்பிலிருக்கும்
பெரியவரின் பிறந்த நாள் கணக்கிலே பிழை
எல்லையோர கடல் பகுதியில் - என்றென்றும்
மீளாத் துயரம் மீனவர்களின் வாழ்வில்
எரிகிற வீட்டில் பிடுங்கியமட்டும் லாபம்
என்பதைப் போல்
எது எப்படி இருந்தாலும் ஊழல் மட்டும்
ஒழியவில்லை இன்னும் நம் தேசத்தில்
நாள்தோறும் கொலை நாடுதோறும் கொள்ளை
தெருவெங்கும் முழக்கம் - தேசம்
முழுதும் கலக்கம்
அரசியல் ஆதாயத்தில்
இன்னும் அரைகுறை வியாபாரிகள்
நம் தேசத்தினை ஆள
இன்னும் எத்தனை நாள்
அறிக்கைகளும் அறிவிப்புகளும்
இலவசமாய்
அனைவருக்கும் பொதுவான கல்வி
தேச நதிநீர்த்திட்டம்
படித்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு
இவை போன்ற இன்னும் பல
பேசுவது பெருமையாய்தான் இருக்கிறது
இன்னும் எத்தனை வருடங்கள்
என்றுதான் புரியவில்லை
கிடப்பதெல்லாம் கிடக்கட்டும்
கிழவனை தூக்கி நடுவில் வை
என்பதனைப் போல்
நாமும் கொண்டாடுகிறோம்
குடியரசு நாளிதனை.

Tuesday, January 24, 2012

திருமண வாழ்த்து

அறுகு போல் வேரோடி
ஆல் போல் தழைத்து
இன் தமிழ்ச்சுவைபோல் இயைந்து
ஈகை பல புரிந்து
உற்ற தமிழ் மக்களோடு - எவர்க்கும்
ஊறு விழைவிக்காது
என்பும் பிறர்க்காய் - எண்ணி
ஏனிந்த யாக்கை பெற்றோமென்றே
ஐயம் தெளிந்த பின்னர்
ஒற்றுமையாய் உறவாடி
ஓங்கார ஒலியெழுப்பி
ஒளடதங்கள் நீங்க
ஃதோடு வாழ்வாங்கு வாழியவே.

Sunday, January 22, 2012

படிப்பவர் பயனுர

பிரார்த்தனை

புன்னெறி தன்னில் செல்லா புத்தி, ஐம் புலன் அடக்கம்,
தன்னலம் நாடாத் தன்மை, சஞ்சலம் ஏலாச் சித்தம்,
இன்னுயிர்ச் சாலம் எல்லாம் இறைவனின் உருஎன்(று) ஓர்தல்,
நின்னடி த்யான யோகம் நிதமெனக்(கு) அருள்வாயே.

மனதினை உன்னில் ஊன்றி, வாழ்வு தாழ்வுற்ற போதும்,
மனநிலை சாய்ந்திடாமல், வாய்த்ததில் திருப்தியுற்று,
வினையினை யெல்லாம் உன்பால் விட்டொரு பற்றுமின்றி,
இனிது வாழ்ந் திட எனக்குன் இன்னருள் செய்குவாயே.

எப்பணி செய்யும் போதும், எவ்வுண வுண்ணும் போதும்,
தர்ப்பணம் ஹோமம் தானம் தபஜபம் பண்ணும் போதும்
அப்பனே அவற்றை யெல்லாம் அன்புடன் உன் தாளினையில்
அர்ப்பணம் செய்யும் நீர்மை அடியனுக்கு அருள் செய்வாயே.

உன்னை எக்காலும் என்றன் உளமதில் எண்ணி நின்றுன்
பொன்னடிச் சரோருகத்தைப் போற்றி நமஸ்கரித்துன்
இன்னருட் கடலில் மூழ்கி, எவற்றினும் உன்னைக் கண்டு
தன்னிய னாகி வாழத் தமியனுக்(கு) அருள் செய்வாயே.

விருப்பமும் வெறுப்பும் இன்றி வினைப்பயன் எல்லாம் உன்றன்
திருப்பதம் தன்னில் சேர்த்துத் திருப்பதியும் திறனு முற்று
ஒறுப்பவர் மீதும் த்வேஷம் உற்றிடா தன்பே பூண்டுன்
திருப்பணி செய்து வாழத் திருவருள் செய்குவாயே.

திருச்சிற்றம்பலம்.

Tuesday, January 17, 2012

வானொலி நிலையத்தில் பொங்கல் 2012 நிகழ்ச்சிக்காக வாசித்த கவிதை

"பொங்கிடுவோம் பொங்கலின்று"

கவிஞர் கூடும் சபைதனிலே
காலம் கொடுத்திட்ட கட்டாயத்தால்
சிந்தனை சிக்கெடுத்து
சீர்வாரி பூதொடுத்து
தமிழர் நலம் பேணுதற்கு
வைக்கின்றேன் பா சபைக்கு !

எளியவனின் எண்ணங்களுக்கு
ஏற்றமிகு செவிமடுத்து
கேட்டிடுவீர் பெரியோரே
இதுவும் ஒரு பா தானே !

தமிழ் மண்ணில் பல கவிகள்
பாரதி முதல் தாசன் வரை
பார் அதில் எளியவனும்
கவிபுனைந்தேன் அதிசயமே !

தமிழோசை முழங்கச்செய்வதில்
வானொலிக்கு முதலிடமாம்
வான் தந்திட்ட ஒலிக்காக
புனைய வந்தோம் பாவும் நாமே !

என்னுடன் பாடவந்த பாவலர்களுடனே
செவிமடுக்கும் எந் தமிழர் செழிப்புற்று வாழ்ந்திடவே
தைத் திருநாள் தனிலே வாழ்த்துகின்றேன்
பாதனிலே !

புது வருடமும் பிறந்ததுவே
போகியும் கழிந்ததுவே
பழையன கழிந்து புதியன புகுந்து
பொங்கல் தினமும் வந்ததுவே

தைத் திங்கள் முதல் நாளே
தமிழருக்குத் திருநாளாம்
திருநாள் வரும் முதல் நாளில்
சிந்தனைகள்சில சிறகடிக்குதே !

போராடும் குணமே நமக்கென்பர்
போராட்டமே வாழ்க்கையுமென்பர்
போராட்டக் களத்தின் நடுவினிலே
போட்டுக் கொடுத்தவனும் தமிழரென்பர்

காக்கைக்கும் தம் குஞ்சு பொன்குஞ் சாம்
எலிவலையானாலும் தனிவலை யாம்
எலிக்கெல்லாம் வலையுண்டு புவியினிலே
எம்மவர்க்கு எங்குண்டு தெரியிலியே

கல்தோன்றி மண்தோண்றா காலத்தே
வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்பர்
எங்கு என்று எவர் அறிவர் ?
எங்கும் அவர் என்றே கூறுவர்.

தைப் பிறந்தால் வழி பிறக்கும்
பிறந்த நாள் பின் இறக்கும்
இறந்த நாட்களை நினைவு கூர்ந்து
இடைவிடாது உழைத்திடுவோம்

உழைக்கும் வர்க்கம் உயர்ந்திடல் வேண்டும்
உன்னதமான சிந்தனை வேண்டும்
சிந்தனைகள் துளிர் விடவே
சிறப்பான செயல்கள் வேண்டும்

தமிழரெல்லாம் கூடிட வேண்டும்
தரணியெல்லாம் சேர்ந்திட வேண்டும்
தமிழர் நலம் பேணிடவே
தற்குறிகளை களைந்திட வேண்டும்

இளைத்த நம் உழவர் கூட்டம்
இன்பம் எனும் ஏற்றம் காண
இந்த நூற்றாண்டு காணப்போகும்
இனிய முதல் பொங்கல் இன்று

இறுகை கூப்பி
இயற்க்கையினை வேண்டி
இந்நாளே வைத்திடுவோம்
ஏற்றமிகு பொங்கல் இன்று

சாதி மத பேத மகன்று
சமுதாய ஏற்றம் கண்டு
சமத்துவமாய் உள்ளமெங்கும்
பொங்கட்டும் பொங்கலின்று

மடமைத்தனம் அழிந்து
மக்கள் எலாம் கூடி நின்று
முற்போக்குச் சிந்தனையோடு
பொங்கட்டும் பொங்கலின்று

உலகத்தோர்க்கு உணவளிக்கும்
உழவர்களின் உள்ளம் பொங்க
உழைத்திடும் வர்க்கமெலாம் உயர்ந்திட எண்ணம் கொண்டு
பொங்கிடுவோம் பொங்கலின்று

உலகெலாம் வாழ்ந்திடும் நம் தமிழர்
உணர்வெலாம் ஒன்றாய்ப் பொங்க
உலகத் தமிழரிடையே ஒற்றுமை பொங்கும் வண்ணம்
பொங்கட்டும் பொங்கல் இன்று

தரணியெல்லாம் தமிழ் மணக்க
தமிழர் தம் பெருமை சிறக்க
தைத் திங்கள் முதல் நாளில்
பொங்கிடுவோம் பொங்கல் இன்று.

தீவு வாழ் தமிழர் அனைவருக்கும் எமது மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்
நன்றி.