Monday, February 28, 2011

பேசவேண்டும். . .

பேசவேண்டும் - இனி
தமிழர்கள் பேச வேண்டும்
தாய் மொழியாம் நந் தமிழதனில்
தமிழர் ஒன்றுபட பேசவேண்டும்

பேச்சுரிமை கண்ட பாரதத்தில்
பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள்-இன்று
தமிழர் படும் அவதிகள் கண்டு
பேசா மெளனம் காப்பது ஏன் ?

உலகம் முழுதும் தமிழர் நிலைதனைக் கண்டும்
தமிழர் பலர் தம்இன்னுயிர் ஈந்தும்
தமிழர் பலர் ஆட்சியிலிருந்தும்
தன்னலமறுத்து பேசாதது ஏன்?

தமிழா தமிழா என்றவரெல்லாம்
தமிழர் நலம் பேணாததுமேன் ?
தமிழே பேச்சாம் தமிழேதம் மூச்சாம்
என்றவரெல்லாம் பேசாமடந்தை ஆனதுமேன்?

அகத்தியன் தந்த காவிரியதனில்
அணை எழுப்பி தடுப்பதுமேன்?
அணைகட்டிய கரிகாற்சோழன் - வம்சம்
இன்று அணைகளால் பரிதவிப்பதுமேன் ?

இவைகளைப் போன்றதோர் பலகேள்வி
எம்மை உலுக்கிப் பார்த்ததுவே
இவைகளுக்கோர் விடைகாண்பதென்றால்
பேசிடவேண்டும் தமிழருமே !

தமிழர்கள் பேசவேண்டும் !
மனம் திறந்து பேசவேண்டும்
மக்கள் நலம் பேண பேச வேண்டும்
மனித மனம் மாற பேச வேண்டும்

நாடு தோறும் பேச வேண்டும்
நாடறிய பேச வேண்டும்
நல்ல தமிழில் பேச வேண்டும்
நம் குலம், காத்திட பேச வேண்டும்

தயக்கமின்றி பேசவேண்டும்
தடைகள் இன்றி பேசவேண்டும்
தன்னலம் மறந்து பேச வேண்டும்
தாயகம் காத்திட பேச வேண்டும்

பொதுநலத்தோடு பேச வேண்டும்
சுயநலமறுத்து பேச வேண்டும்
முடியாட்சி கொண்ட நம்மிடத்தே
நற் குடியாட்சி மலர்ந்திட பேச வேண்டும்.

உலக அரங்கினில் பேசவேண்டும்
உண்மைதனை உரக்க பேசவேண்டும்
உலகோர் யாவரும் உணரும் வண்ணம்
உண்மைநிலைதனைப் பேசவேண்டும்

இன்று சுழியிடும் இப்பேச்சு
இனியேழ் தலைமுறைக்கும்
உரைக்கக் கேட்டு
இனிதமிழ் மொழியாம்
பேசிடுவோர்தம் - இன்னல்
களைந்திட பேசவேண்டும்
பழம் பெரு கதைகள்
இனி பேசோம்
பண்டய தமிழினை இனி உரைப்போம்
புதிதாய் இனி தமிழர்தம் மனதில்
புதுமைகள் பல படைத்திடுவோம்
பழைய சாத்திரம் கலைந்திடுவோம்
புதிய சரித்திரம் படைத்திடுவோம்
எங்கும் தமிழ் எதிழும் தமிழ்
என்று உலகோர் போற்ற வாழ்ந்திடுவோம்.
***

Monday, February 21, 2011

நமது தேசம்

உலக வரைபடத்தில்
உன்னத பூமியாய்
உலக அரங்கில்
ஊழல் அகல்விளக்காய்
வளரும் நாடுகளின்
வரிசைகளில் ஒன்றாய்
வளர்ந்த பணக்காரர்களின்
வரிசைகளில் முதலாய்
வேற்றுமையில் ஒற்றுமை - மனித
ஒற்றுமையில் வேற்றுமைகளாய்
காண்பதும் வேறு காட்டுவதும் வேறு
காட்ட நினைப்பதோ வேறு வேறு. . .

தமிழா தமிழா

தமிழா தமிழா நீ பேசுவது தமிழா!

ஒரே மொழிதனைப் பேசிடும் நம்
உணர்வுகள் ஒன்றிப் பிறவாதது ஏன் ?
ஒரே மொழி உணர்த்திடும் உணர்வை
உணர்ந்தும் உணராதிருப்பது ஏன் ?

உலகம் முழுதும் இருக்கின்றோம்
உணர்வுஅற்று கிடக்கின்றோம்
உண்டு உறங்கி கழித்ததைவிட
குல உயர்வுக்காய் என்ன செய்திட்டோம் ?

அன்றய சரித்திரப் பெறுமைகளால்
தமிழனாய் பிறந்து தலைநிமிர்ந்தோம்
இன்று வாழும் தமிழர்களை
நாளைய சரித்திரம் பழித்திடுமே !

சரித்திரம் சாத்திரம் விட்டுவிடு
நம் சந்ததி இனி பழிக்காதிருந்துவிடு
நம்மில் ஒருவனாய் நம் இனத்தோன்
இனிமேலும் அழியாது காத்துவிடு !

உலகை ஆண்ட தமிழினமே
உலக வரைபடத்தில் உன் இடம்
எதுவென்று காட்டு - உன்
மூதாதையர் பாட்டன் வாழ்ந்த,
சரித்திரத்தையாவது நிலைநாட்டு !

உலக மக்கள் உய்வதற்கு
உன்னதமாக பாடுபட்டாய்
உன்மக்கள் உயிர்காக்க
உத்தமனே நீ ஏன் மறந்தாய் ?

கண் இருந்தும் குருடனாக
காதிருந்தும் செவிடனாக
வாய் இருந்தும் ஊமையாக
இருந்தது போதும் எழுந்துவிடு
இனிமேலாவது ஒன்றாய்க் குரல் கொடு!

மகிழ்ச்சியில் திளைத்திடும் மனிதர்காள்
தம் மாந்தர் நிலைதம் அறிவீரோ ?
உதித்த செங்கதிர் வீழ்ந்ததென்று
உணர்வு பொங்கித் திரிகிரீரோ ?
வீழ்ந்த செங்கதிர் மறைந்தான் என்று
மனமகிழ்ச்சியில் திரியாதீர்
மறைந்த கதிரவன் மீண்டு எழுவான்
என்பதறியா திழைக்கின்றீர் - இனி
எழும் செங்கதிர் வெறும் எழுச்சிக்கல்ல
சரித்திரம் செய்திட்ட தவறுகளை - இனி
சரிசெய்திடவே என்பதுகாண்.
***