உணர்வுகள் முழுதும் ஒன்றிக் கிடக்கும்
உன்னதமான உறைவிடம்.
உற்றார் பெற்றோர் உறவினர் அனைத்தும்
ஊழ் வினைபோலே துறத்திடும்.
உறவுகள் இன்றி தவித்திடும் போது
உறங்க விழிகள் மறுத்திடும்.
உறவும் உணர்வும் ஒன்றானால்
காதல் கூட சுகம் தானே !
காதல் என்பது கொச்சை அல்ல
காணும் கண்களைப் பொறுத்தது தான்
கண்களும் காதலும் ஒன்றானால்
கண்ணீர் கூட இணித்திடுமே !
இம்மையும் மறுமையும் அதற்கில்லை
இதயங்கள் இணைவது மறுப்பதில்லை
இருவரின் இதயங்கள் இணைவதற்காக
ஏனையர்கள் இருட்டில் தவிப்பதும் ஏன் ?
காதலும் காமமும் ஒன்றென்று
காண்பவர் பலரும் கருதுகிறார்
காதலும் காமமும் ஒன்றல்ல - ஆனால்
ஒன்றை விட்டு மற்றது பிரிவதல்ல.
காமம் அன்றி காதல் நிலைத்திடும்
காதலில் காமம் வசப்படும்
உலகத்து உயிர்கள் நிலைத்திருக்க
இரண்டும் ஒன்றாய் இறைவனின் படைப்பில்.
****